மாமனாரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைஞாயிறு பகுதியில் மணிவாசகம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு தமிழ்மாலா என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுசீந்திரனை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அழகு மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மணிவாசகம் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக தமிழ் மாலாவுக்கும் சுசீந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடும் கோபத்தில் இருந்த சுசீந்திரன் அவ்வழியாக நடந்து சென்ற கொண்டிருந்த தனது மாமனாரை இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அறிந்த தலைஞாயிறு காவல்துறையினர் வழக்கு பதிந்து மாமனாரை அடித்து கொன்ற மருமகனான சுசீந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.