புதுச்சேரியில் உள்ள 9 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் 5 தனியார் தொழில் பயிற்சி நிலையங்களின் பயிற்சியை முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டயம் வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ரங்கசாமி 2021, 2022 ஆம் ஆண்டு வரை பயின்ற 884 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், தொழில்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, தொழில்நுட்ப கல்லூரி செயலர் முத்தம்மா, அரசு அதிகாரிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் ஐடிஐ படித்து முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டியது அரசின் கடமை.
மாணவர்கள் பயிற்சி பெற புதிய தொழில்நுட்பத்தில் பணிமனைகளை உருவாக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு தேவையான நிதி ஒதுக்கியுள்ளது, விரைவில் அமைத்துக் கொடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் அதிகமான கல்லூரிகள் உள்ளது இதில் படித்தவர்கள் புதிய தொழில்களை உருவாக்க வங்கிகள் கடன் வழங்க தயாராக உள்ளது. எனவே புதிய தொழில் தொடங்க இளைஞர்கள் தயாராக வேண்டும். மேலும் ஐடிஐ மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகை ரூ.150 லிருந்து ரூ.1000 ஆக விரைவில் உயர்த்தி வழங்கப்படும் என்றும் புதுச்சேரியை மின்துறையில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.