ஓட்டலில் வெடிகுண்டு இருப்பதாக மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள குரு கிராம் பகுதியில் தி லீலா ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு நேற்று தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது பேசிய மர்ம நபர் ஒருவர் ஓட்டலில் வெடிகுண்டு இருப்பதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டல் நிர்வாகம் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஓட்டலில் வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனை செய்தனர். மேலும் அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றினர்.
ஆனால் இறுதியில் ஓட்டலில் வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில் காவல்துறையினர் தொலைபேசி மூலம் பேசிய நபர் குறித்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் வெடிகுண்டு இருப்பதாக கூறி புரளியை கிளப்பியது மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரிந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது. நாங்கள் ஓட்டல் வளாகம் முழுவதும் சோதனை செய்தோம். ஆனால் அங்கு சந்தேகம் படும்படி எதுவும் இல்லை. மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் செய்யப்பட்ட புரளி அழைப்பு இது. அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்