தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சரான ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர் “இது தொடர்பாக இரண்டு முறை கூட்டங்கள் கூட்டப்பட்டது. மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்தியாவுக்கே இந்த சட்டம் முன்மாதிரியாக அமைய வேண்டும். எந்த நீதிமன்றத்தாலும் இந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்ற வகையில் கொண்டுவர வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம். எனவே அதற்கேற்ற வகையில் தற்போது விரைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
மிக விரைவில் அதற்கான அவசர சட்டம் கொண்டுவரப்படும். பின்னர் சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டம் கொண்டுவரப்படும்” என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் தேர்வு விளக்கு மசோதா பொருத்தவரையில் கவர்னரிடமிருந்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சில விளக்கங்கள் கேட்கப்பட்டன. அதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சட்டத்துறை மூலம் பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வேந்தர்களாக யாரை நியமிக்க வேண்டும் என்பதை அரசின் முடிவுக்கு விட வேண்டும் என்ற சட்டமுன்முடிவுகளும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.