இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மரில் உயிரிழந்துள்ளார். அவரது உடல் கார் மூலமாக ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பெர்க் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு உள்ள புனித கில்ஸ் தேவாலயத்தில் ராணியின் உடல் வைக்கப்பட்டு இருக்கிறது. இதனை முன்னிட்டு தேவாலயத்தை சுற்றி உள்ள கட்டிடங்களில் ஸ்னைப்பர் துப்பாக்கிகளுடன் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கின்ற ராணியின் உடலை சுற்றி ஸ்காட்லாந்து அரச வழிமுறைப்படி வெள்ளை மலர்கள் வைக்கப்பட்டு அரண்மனை மெய் காப்பாளர்களும் வில்லாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு பாதுகாப்பு வளையம் போடப்பட்டு பொதுமக்கள் பார்வையின்றி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஸ்காட்லாந்து மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று லண்டன் நோக்கி ராணியின் உடல் கொண்டு செல்லப்பட இருக்கிறது. அங்கு நாளை முதல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் ராணியின் உடல் 4 நாட்கள் வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ராணியின் உடலுக்கு பல லட்சம் மக்கள் அஞ்சலி செலுத்த திரண்டு வருவார்கள் என்ற காரணத்தினால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது.