சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் (Antonio Guterres) பாகிஸ்தான் சென்றுள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு பாகிஸ்தான் உறைவிடம் தந்துவருகிறது. இதுகுறித்த சர்வதேச மாநாடு பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இதில், உரையாற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் பாகிஸ்தான் சென்றுள்ளார். பாகிஸ்தான் அரசு, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் இணைந்து இந்த மாநாட்டை நடத்தவுள்ளது. இதனை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடங்கி வைக்கவுள்ளார். ஐநாவின் பல முக்கிய அலுவலர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இப்பயணத்தின்போது, அவர் கர்தார்பூர் வழித்தடத்திற்கு செல்லவுள்ளார். மேலும், அதிபர் அரிப் அல்வி, பிரமதர் இம்ரான் கான், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி ஆகியோரை சந்தித்து அண்டோனியோ பேசவுள்ளார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவர் பிப்ரவரி 19ஆம் தேதி நியு யார்க் செல்லவுள்ளார்.