கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து வழக்கம்போல் இல்லாமல் இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இவர்கள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கமான ஒன்றாகும்.
இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் சார்பில் தினந்தோறும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் படகு இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று காலை விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல படகு துறையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். ஆனால் கடல் நீர்மட்டம் வழக்கம் போல் இல்லாமல் காலையில் மிகவும் தாழ்வாக இருந்துள்ளது.
இதனால் 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை என்பதால் படகு துறையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதன் பின்பு காலை 10 மணிக்கு கடல் நீர்மட்டமானது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால் 2 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்துவிட்டு கரைக்கு திரும்பி உள்ளனர்.