கேரள மாநிலம் அரைகிணறு பகுதியில் 12 வயது சிறுவன் நூராஸ், வீட்டிற்கு வெளியே சாலையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். அப்போது திடீரென வேகமாக ஓடி வந்த தெரு நாய் ஒன்று சிறுவனை கடித்து குதறியது. இதனால் சிறுவன் தப்பித்து செல்ல முயன்றும் விடாமல் தெருநாய் தொடர்ந்து கடித்த நிலையில், இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் சிறுவனை கடித்த நாய் அதேநாளில் அப்பகுதியை சேர்ந்த மேலும் 3 பேரை கடித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மாநில அரசின் தகவல்படி 2022-ல் இதுவரையிலும் கேரளாவில் 21 பேர் வெறிநாய்க் கடியால் இறந்துள்ளனர். அவர்களில் பாதிக்கப்பட்ட 5 பேர் அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் படி ரேபிஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்டனர்.
கேரளாவில் வெறிநாய்க் கடிக்கு எதிரான தடுப்பூசிகள் பயனற்றதாக மாறிவருகிறது. இது தொடர்பாக அண்மை காலமாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதன்பின் மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ், மாநிலத்தில் கிடைக்கும் ரேபிஸ் தடுப்பூசியின் தரத்தை பரிசோதிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் கேட்டுக்கொண்டார். கேரளா முழுதும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக உடனடி செயல் திட்டத்தை உருவாக்க மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது. இதுபற்றி முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துப் பேச இருப்பதாக உள்ளாட்சித்துறை மந்திரி எம்.பி.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாநிலத்தில் 152 தொகுதிகளில் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ஏபிசி) மையங்கள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக எம்.பி.ராஜேஷ் தெரிவித்தார். அத்துடன் பொது மக்களின் ஒத்துழைப்புடன் விரைவில் தீர்வுகாணப்படும் எனவும் அவர் கூறினார். இந்நிலையில் தெரு நாய்களுக்குத் தொடர்ந்து உணவளிக்கும் நபர்களே தடுப்பூசி செலுத்துவதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அந்த விலங்குகள் மக்களைத் தாக்கினால் அதற்கான செலவையும் ஏற்கவேண்டும் எனவும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் ஜே.கே.மகேஸ்வரி போன்றோர் அடங்கிய சுப்ரீம்கோர்ட் அமர்வு பரிந்துரைத்துள்ளது. மக்களின் பாதுகாப்புக்கும் விலங்குகளின் உரிமைகளுக்கும் இடையில் சமநிலை பேணப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
கடந்த 2019ம் வருடம் முதல் இந்தியாவில் 1.5 கோடி நாய்கடி வழக்குகள் பதிவாகி இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது. அதிகபட்சம் உத்தரப்பிரதேசத்தில் (27,52,218), தமிழ்நாட்டில் (20,70,921), மராட்டியத்தில் (15,75,606) மற்றும் மேற்கு வங்காளத்தில் (12) ,09,232) பதிவாகி உள்ளது. மற்றொரு புறம் லட்சத்தீவில் இதே காலக்கட்டத்தில் நாய்கடி வழக்குகளே இல்லை. இது 2020ல் 46,33,493 ஆகவும், ஒரு வருடம் கழித்து 17,01,133 ஆகவும் குறைந்து இருக்கிறது.
இருந்தாலும் 2022 ஆம் வருடம் முதல் 7 மாதங்களில் மட்டும் 14.5 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இந்த வருடம் அதிகமான வழக்குகள் தமிழகம், மராட்டியத்தில் பதிவாகி இருக்கிறது. இந்தியா ஒவ்வொரு வருடமும் 100க்கும் அதிகமான ரேபிஸ்வழக்குகள் மற்றும் இறப்புகளைப் பதிவு செய்கிறது. எனினும் செல்லப் பிராணிகளைவிட தெரு நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகம். கடந்த 2019 கணக்கின்படி இந்தியாவில் 1,53,09,355 தெரு நாய்கள் இருக்கிறது. இது 2012ல் 1,71,38,349 ஆகக் குறைந்து உள்ளது. உத்தரப்பிரதேசம் (20,59,261), ஒடிசா (17,34,399) மற்றும் மரட்டியத்தில் அதிக எண்ணிக்கையிலான தெரு நாய்கள் காணப்படுகிறது. (12,76,399) மணிப்பூர், லட்சத்தீவு மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி போன்ற இடங்களில் தெருநாய்கள் இல்லை.