தடியடி நடத்திய காவல் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திவருகின்றனர். மக்களின் இந்த உணர்வுகளை தமிழ்நாடு அரசும், காவல் துறையும் புரிந்து கொள்ளவில்லை. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தொடர் காத்திருப்புப் போராட்டத்தின்போது மக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.
குறிப்பாக குழந்தைகளுடன் இருந்த பெண்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் துன்புறுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அமைதி பெற்று நடைபெறும் இந்தப் போராட்டத்தை காவல் துறையினர் கவனமாக கையாள வேண்டும். தாக்குதல் நடத்திய காவல் துறை அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.