பா.ஜ.க-வை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாசர்மா, பிரதமர் மோடியை தீவிரமாக எதிர்த்து வரும் கே.சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் தெலுங்கானா மாநிலத்துக்கு சென்றார். இதையடுத்து ஐதராபாத் நகரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். பொதுக்கூட்ட மேடையில் அவர் பா.ஜ.க நிர்வாகிகளுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த மேடையில் திடீரென்று ஏறிய ஒரு நபர், அங்கிருந்த மைக்கை பிடித்துவளைத்து திருப்பியதுடன் அசாம் முதல் மந்திரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அந்நபரை பா.ஜ.க நிர்வாகிகள் அப்புறப்படுத்தினர். அதன்பின் ஹிமந்தா பிஸ்வாசர்மா செய்தியாளர்களிடம் பேசியதாவது “முதல் மந்திரி கேசிஆர் பா.ஜ.க இல்லாத அரசியல் பற்றி பேசுகிறார். ஆனால் நாங்கள் வாரிசுயில்லாத அரசியல் பற்றி பேசுகிறோம். ஐதராபாத்தில் கேசிஆர் மகன் மற்றும் மகளின் திரைப்படங்களை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். நாடு வாரிசு அரசியலிலிருந்து விடுபட வேண்டும். ஒரு அரசு நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்துக்காக இருக்கக்கூடாது” என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் அசாம் முதல்வருக்கு நிகழ்ந்த அவ மரியாதை மாநில அரசின் முழு தோல்வியை காட்டுவதாகவும், இச்சம்பவத்திற்காக தெலுங்கானா முதல் மந்திரி கேசிஆர், அசாம் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் சட்டசபை துணை சபாநாயகர் நுமல் மோமின் வலியுறுத்தி இருக்கிறார். மேலும் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.