மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள முத்தம்பட்டியில் கொத்தனாரான பிரேம்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை பிரேம்குமார் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்காக தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாளையம்- அரவக்குறிச்சி சாலையில் சத்திரப்பட்டி அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.