பணம் இல்லாததால் இறந்த தாய் உடலை வீழ்சேரில் வைத்து சுடுகாட்டுக்கு கொண்டுவந்துள்ளார் அவரின் மகன்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதிநகர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியினர் மகன் முருகானந்தத்துடன் வசித்து வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு உடல்நலம் சரியில்லாமல் போக அவரை முருகானந்தம் தன்னுடன் வைத்து கவனித்து வந்தார். இருப்பினும் ராஜேஸ்வரிக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு புண்ணான நிலையில் அந்த தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே வீட்டில் வைத்து தாயை கவனித்து வந்துள்ளார் முருகானந்தம். இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்க்கிறார்.
தாயை கவனிப்பதற்காக பெரும்பாலான நாட்கள் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரை வறுமை வாட்டியது. தொடர் சிகிச்சையில் இருந்த ராஜேஸ்வரி இன்று திடீரென்று காலமானார். வறுமை ஒருபுறம் அறியாமை மறுபுறம் என்பதால் செய்வதறியாமல் தவித்த முருகானந்தம் யாரிடமும் கூறாமல் உடலை தகனம் செய்ய முடிவு செய்தார். தன் தாயின் உடலை ஒரு வீல்சேரில் அமர்ந்திருப்பது போல் வைத்து உடலை சுற்றித் துணியால் கட்டி பின்னர் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி வந்து தகனமேடை அமைந்துள்ள இடத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
பொழுது விடுவதற்குள் உடலை எடுத்துச் சென்று முருகானந்தம் தகனம் செய்திட எரிவாயு தகனம் மேடை பராமரிப்பாளரான ஸ்ரீதரனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த அவர் மூதாட்டியின் உடல் வீல்சேரில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அரசின் பல்வேறு உதவிகள் உள்ள நிலையில் ஏன் இப்படி கொண்டு வந்தீர்கள்? என்று கேட்க தெரியாமல் இதுபோன்று செய்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார். பின்னர் எரிவாயு தகன மேடை பணியாளர் உடலை பெற்றுக் கொண்டு இறுதி சடங்கு செய்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .