கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை அகிலஇந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்திலிருந்து துவங்கினார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் இடையே எழுச்சியை ஏற்படுத்தவும் “பாரத் ஜோடோ யாத்ரா” எனும் பெயரில் இந்த பாத யாத்திரையை ராகுல் தொடங்கி இருக்கிறார். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியே கன்னியாகுமரி -ஸ்ரீநகர் வரை மொத்தம் 3,500 கி.மீ தூரம் 150 நாள்களில் நடந்து சென்றடைகிறார். ராகுல்காந்தியின் இந்த நடை பயணத்தை பா.ஜ.க-வின் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் தேசிய கைத்தறிநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்கள் சேவை மையத்தின் சார்பாக குனியமுத்தூரிலுள்ள தனியார் கல்லூரியில் கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவியான வானதிசீனிவாசன் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல்காந்தி பற்றி கருத்து கூறினார். அத்துடன் இந்நிகழ்ச்சியில் நடிகையும் பா.ஜ.க நிர்வாகியுமான காயத்திரி ரகுராமும், வானதி சீனிவாசனும் இணைந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். கைத்தறி ஆடைகளை அணிந்து மேடையில் கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து வானதி சீனிவாசன் பேசியிருப்பதாவது “காங்கிரஸ் கட்சியானது ஒரு மூழ்கிய கப்பலாகும். மேலும் ராகுல்காந்தி நடந்தாலும்சரி, ஓடினாலும் சரி எந்தவொரு பலனையும் தராது என தெரிவித்தார். இறந்துபோன காங்கிரஸ் கட்சிக்கு, ராகுல் காந்தியின் நடைபயணத்தின் வாயிலாக உயிரூட்ட முடியுமா? என முயற்சி செய்து பார்க்கிறார்கள். எனினும் அண்மை காலமாக காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவர்கள் தேசிய சிந்தனையால் ஈர்க்கப்பட்டு மோடியின் செயல்பாடுகளால் அவர்கள் பா.ஜ.க-விற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். கட்சியை மீட்பதற்காக ராகுல்காந்தி இந்த பல பரீட்சையில் ஈடுபட்டு இருக்கிறார். எனினும் அது எந்த பயனையும் தராது. காலம் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் செய்வது போல ராகுல்காந்தியின் நடைபயணம், அவரது உடல் நலத்திற்கு நல்லதாக இருக்கலாம்” என்று அவர் கூறினார்.