சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னாக்காணி கிராமத்தில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய உறவினர் வேலுச்சாமி. இவர்கள் 2 பேரும் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் பொண்ணாக்காணி சாலையில் மது குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் அருகில் சென்று பார்த்த போது வேலுச்சாமி இறந்து கிடந்தார். அதன்பின் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மனோகரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மனோகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சத்யராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மனோகரனின் மருமகன். இவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது மனோகரனின் மகள் மாசிலாமணி சத்யராஜ் காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இதில் சத்யராஜ் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மனோகரன் 80 சென்ட் நிலத்தை விற்பனை செய்துள்ளார்.
இதன் மூலம் மனோகரனுக்கு 35 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. இந்த பணத்தை வைத்து மனோகரன் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துவிட்டு ஜாலியாக இருந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட சத்யராஜ் மனோகரன் இருந்த பணத்தை பறிப்பதற்காக மதுவில் விஷம் கலந்து மனோகரனிடம் கொடுத்துள்ளார். இந்த மதுவை மனோகரன் தன்னுடைய உறவினர் வேலுச்சாமியுடன் சேர்ந்து குடித்துள்ளார். அந்த மதுவை பிடித்த சிறிது நேரத்திலேயே வேலுச்சாமி மற்றும் மனோகரன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் மருமகனே மாமனாரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.