இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை பட்டி, தொட்டிவரை சென்றடையக் காரணமாக இருந்தது யூபிஐ தான். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் உருவாக்கிய யூபிஐயின் வளர்ச்சி கொரோனா காலக்கட்டத்திற்கு பின் அசுரவேகத்தில் வளர்ந்து வளருகிறது. அண்மையில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. எனினும் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் முறையை நடைமுறைபடுத்தப் போவதில்லை என்று அறிவித்தார். இது கட்டணம் இல்லாத சேவை என்பதால் கூகுள் பே, போன் பே ஆகிய ஆப்கள் வாயிலாக யூபிஐயை பயன்படுத்தி பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர்.
இப்போது அனைவரிடத்திலும் ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் வசதி உள்ளதால் டிஜிட்டல் பரிவர்த்தனை பன்மடங்கு வேகம் காணப்படுகிறது. இந்த நிலையில் யுபிஐ பரிவர்த்தனையானது ஆகஸ்டில் மட்டும் 10.73லட்சம் கோடியை எட்டி இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது சென்ற மாதத்தைவிட சற்று அதிகம் ஆகும். இந்தியத் தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் UPI பரிவர்த்தனைகளின் மதிப்பு மொத்தம் 6.57 பில்லியன் அதாவது 657 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்ற ஜூலை மாதத்தில் 628கோடி பரிவர்த்தனைகளும், ஜூன் மாதம் 10.14 லட்சம் கோடி மதிப்புள்ள 586 கோடி பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
NCPIன் மற்ற தரவுத் தொகுப்புகளின் படி, உடனடி பணப்பரிமாற்ற முறையான IMPS வாயிலாக கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் ரூபாய்.4.46 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 46.69 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு முன்பு ஜூலை மாதத்தில் மொத்தம் ரூபாய்.4.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 46.08 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. டோல் பிளாசாக்களில் தானியங்கி கட்டணமுறையான NETC FASTAG வாயிலாக ஆகஸ்ட் மாதம் ரூபாய்.4,245 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளும், ஜூலை மாதம் ரூ.4,162 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில் ஜூலை மாதம் 26.5 கோடியாக இருந்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை, ஆகஸ்டில் 27 கோடியாக அதிகரித்துள்ளது. ஆதார் எண்ணைக் கொண்டு வீட்டு வாசலுக்கே வந்து பணம் வழங்கும் அஞ்சலகத்தின் AEPS முறை சென்ற ஜூலை மாதத்தைவிட ஆகஸ்ட் மாதத்தில் 10 % வரை குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் 11 கோடி பரிவர்த்தனைகள் வாயிலாக ரூபாய்.30,199 கோடி விநியோகிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் ரூபாய்.27,186 கோடி மதிப்புள்ள 10.56 கோடி பரிவர்த்தனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கடந்த 2019 ஆம் வருடம் அக்டோபரில் யுபிஐ பரிவர்த்தனையானது முதன் முறையாக 100 கோடியை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் 2020 அக்டோபரில் இரு மடங்காக அதிகரித்து 200 கோடியைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.