படகில் மயங்கி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல குறும்பனை பகுதியில் மீனவரான ஜஸ்டின்(67) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜஸ்டின் அதே பகுதியில் வசிக்கும் சில மீனவர்களுடன் பைபர் படகில் கடலில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென ஜஸ்டின் படகில் மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்பி ஜஸ்டினை குளச்சல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ஜஸ்டின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.