டாடாசன்ஸ் குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி நேற்று முன்தினம் மும்பை அருகில் நடந்த கார் விபத்தில் இறந்தார். அத்துடன் இவர் பயணித்த காரில் முன்னிருக்கையில் சீட்பெல்ட் அணிந்து பயணித்தவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பக்க இருக்கையில் அமர்ந்து சென்ற சைரஸ் மிஸ்ட்ரி சீட்பெல்ட் அணியாததால் உயிரிழந்தார். அவரது இறுதிச்ச டங்கு இன்று நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் உலக அளவில் சாலை விபத்துகளில் 13½ லட்சம் பேர் இறக்கிறார்கள். இவற்றில் 90 % இறப்புகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
சென்ற ஜூலை மாதம் வெளியாகிய பத்திரிகை ஆய்வு முடிவுகளின் படி, இந்தியாவில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தினால் வருடத்திற்கு 30 ஆயிரம் பேர் உயிரைக் காப்பாற்றமுடியும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாடு முழுதும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் 10ல் 7 இந்தியர்கள் காரில் பின்இருக்கையில் அமர்ந்து பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவதில்லை என தெரியவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் இந்தியாவின் 274 மாவட்டங்களிலுள்ள 10,000-க்கும் அதிகமான மக்களிடமிருந்து பதில்கிடைத்துள்ளது.
அந்த வகையில் 26 % பேர் மட்டுமே பின் பக்க இருக்கையில் அமரும்போது சீட்பெல்ட் அணிவது வழக்கம். 10,000 நபர்களில் 70% பேர் பின் பக்க இருக்கையில் அமரும்போது சீட்பெல்ட் அணிவதில்லை. 4 % பேர் பின்பக்க இருக்கையில் அமர்ந்து பயணிப்பதில்லை என தெரிவித்துள்ளனர். காரின் பின் இருக்கையில் அமர்பவர்களும் சீட்பெல்ட் அணிந்தால் பெரியவிபத்துகள் நேரிடும்போது குறைவான காயங்களும் உயிர்தப்பிக்க வாய்ப்புகளும் அதிகம். மோட்டார்வாகன சட்டப்படி, பின் இருக்கையில் இருப்பவர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். ஆனால் இது தொடர்பான விழிப்புணர்வு இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.