தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான திருச்சிலுவைநாதர் ஆலயத்தில் 443-வது மகிமை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலையில் மணப்பாடு மறைவட்ட முதன்மை குரு ஜான் செல்வம் தலைமையில் திருப்பலி நடந்ததையடுத்து ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்த விழாவில் பங்குத்தந்தைகள் மனோ, ஜான் சுரேஷ், டென்னிஸ் வாய்ஸ், சில்வஸ்டர், டிமெல், பாலன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பதினோரு நாட்கள் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. 9-ஆம் திருநாளான வருகிற 12-ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 6.30 மணிக்கு திருப்பலி, திருச்சிலுவை பவனியும், 10-ம் திருநாளான 13-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி, இரவு 7 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருவிழா மாலை ஆராதனையும் நடைபெறும்.
விழாவின் சிகர நாளான 14-ஆம் தேதி (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு திருப்பலி, 5 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி, 6 மணிக்கு திவ்விய ஐந்து திருக்காய சபையினர் பவனி நடைபெறும். இதனையடுத்து ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருவிழா திருப்பலி, மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடக்கிறது. பின்னர் மாலை நேரத்தில் கொடியிறக்கம், நன்றி திருப்பலி நடைபெறுகிறது. வருகிற 15-ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று நடைபெறும் புனித வியாகுல அன்னை திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தைகள் லெரின் டிரோஸ், ஆரோக்கிய அமல்ராஜ் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.