ஆவின் பொருள்கள் விற்பனை குறைந்துள்ள காரணத்தினால் அவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு நடத்தும் ஆவின் நிறுவனம் மூலமாக பால் மட்டும் இல்லாமல் வெண்ணெய், பன்னீர் உள்ளிட்ட 200 வகையான பால் உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவை ஆவின் நேரடி விற்பனை நிலையங்கள் மட்டுமின்றி தனியார் பாலகம், சூப்பர் மார்க்கெட், மளிகை கடை, மொத்த விற்பனை கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் பால் விலையை உயர்த்தியுள்ள காரணத்தினால் ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது.
பாலை அதிக விலைக்கு கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பதால் ஆவின் நிறுவனத்திற்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகின்றது. இதை சமாளிக்க புதிய பால் பாக்கெட் விற்பனையை ஆவின் நிறுவனம் துவங்கியிருக்கின்றது. ஆவின் உப பொருள்கள் விற்பனை கணிசமாக குறைந்தால் ஆவின் பொருள்கள் வீணாவதால் நிறுவனத்தின் நஷ்டம் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கின்றது. ஆவின் பால் உப பொருட்களை வாங்கி விற்கும் பாலகம் நடத்துவோரிடம் ரொக்க பணமின்றி மின்னணு முறையில் மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்படுகின்றது. பலரால் தினமும் அவ்வாறு செய்ய முடியவில்லை.
ஆவின் பொருள்களை விற்பனை செய்வதால் கிடைக்கும் லாபம் என்பது குறைவு. இது மட்டுமில்லாமல் பொருள்களை வாங்கியதும் பணம் செலுத்த அறிவுறுத்தப்படுகின்றன. தனியார் நிறுவனங்களைப் போல பணம் செலுத்த அவகாசம் வழங்குவது கிடையாது. ஆவின் பாலை தவிர மற்ற உப பொருட்களை வாங்க பாலகம் நடத்துவோர் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் இந்த பொருள்களின் விற்பனையை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஆவின் பாலகத்திற்கும் வாரத்திற்கு இரண்டு முறை 5000 ரூபாய்க்கு மேல் பொருள்களை கொள்முதல் செய்ய வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.