Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: EPS மானநஷ்ட வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு ….!

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்க்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2016 – 21 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு 692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு, செய்துள்ளதாக அப்போது நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியோரிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் கடந்த ஜூலை 22ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூகவலைத்தளங்களிலும் வெளியிட்டிருந்தது. அறப்போர் இயக்கத்தின் இந்த செயல் தமது பெயருக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதோடு, மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறி, இதற்கு மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என அறப்பொரு இயக்கத்தினுடைய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்றைக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதன் அடிப்படையில் டெண்டர் ஒதுக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு எனவும்,  இதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது எனவும், வாதிடப்பட்டது. ஒரு நிறுவனத்துக்கு ஆதரவாக டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அந்த நிறுவனம் டென்டரில் கலந்து கொள்ளவில்லை எனவும்,

டென்டரில் கலந்து கொண்ட நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரவில்லை எனவும் எடப்பாடி சார்பில் வாதங்களாக முன்வைக்கப்பட்டது. எனவே தமக்கு மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. அறப்போர் இயக்கத்தினுடைய வாதத்தில் ஆதாரங்களின் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதாகவும், லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகாரை தான் தாங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி குறித்து தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டு கூறவில்லை எனவும், பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் சார்பில் வாதிடப்பட்டது. 2018-19 ஆம் ஆண்டில் போடப்பட்ட சாலையே மீண்டும் போடுவதற்காக ரூபாய் 276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், அனுபவம் இல்லாத  நிறுவனங்களுக்கு டெண்டர்களை ஒதுக்கி விதிமுறை மீறல்களில் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் டெண்டர் குறித்து முக்கிய கொள்கை முடிவுகளை எடுத்ததில் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும், முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றதாகவும் அறப்போர் இயக்கம் சார்பில் வாதத்தில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திங்கட்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய இருதரப்புக்கும் உத்தரவிட்டு, வழக்கினுடைய தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கிறார்.

Categories

Tech |