விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராஜாம்பாளையம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மன்னார்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக குமரேசன் என்பவர் ஓட்டி வந்த சுற்றுலா வேன் அவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குமரேசனை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அமிர்தீன் குமரேசனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். இதனையடுத்து அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.