காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 1.75 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடலூர் உட்பட 12 மாவட்டங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கல்லணை, கீழணை வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு வந்து, அதன் வழியே கடலில் கலக்கிறது.
இந்நிலையில் நேற்று மாலை கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிதம்பரம் அடுத்த பெராம்பட்டு, மடத்தான்தோப்பு, கீழக்குண்டலப்பாடி, ஜெயங்கொண்டப்பட்டினம், அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம், திட்டுக்காட்டூர் உட்பட 10க்கும் அதிகமான கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரசு அதிகாரிகள் உதவியுடன் கீழக்குண்டலப்பாடி கிராமத்திலுள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தஞ்சமடைந்தனர். அத்துடன் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொள்ளிட கரையோர கிராமங்களை கண்காணித்து வருகின்றனர்.