தென் இந்தியாவின் மிகப் பெரிய மண்அணை எனும் பெருமையை கொண்டது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டத்தின் உயரமானது 105 அடி என கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப் பகுதியிலிருந்து வருகிற பவானி ஆறும், கூடலூர் மலைப் பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆதாரங்களாக திகழ்கிறது. அந்த அணையிலிருந்து திறக்கப்படும் நீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது. இது தவிர்த்து ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை திகழ்கிறது.
இந்நிலையில் பவானிசாகர்அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப் பகுதியில் சென்ற சில நாட்களாகவே மழைபெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தண்ணீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் மதியம் 12 மணி அளவில் அந்த அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் வந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6 ஆயிரத்து 900 கன அடியாக அதிகரித்தது. இதற்கிடையில் அணையின் நீர்மட்டமானது தொடர்ந்து 102அடியாக நீடிக்கிறது. இதேபோன்று அணையிலிருந்து பவானியாற்றில் பாசனத்திற்காக திறக்கப்படும் உபரிநீரின் அளவும் வினாடிக்கு 5100 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 1,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது