கடலூர் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்த ராஜ் என்பவரின் 2வது மகன் அற்புதராஜ் (20). இவர் 10ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ள சூழ்நிலையில், விருத்தாச்சலம் காய்கறி சந்தையில் பணிபுரிந்து வருகிறார். இதேபோன்று விருத்தாச்சலம் அடுத்த வீராரெட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை- லதா தம்பதியினரின் ஒரே மகள் சக்தி(18). இதில் ஏழுமலை இறந்த பிறகு, தன் ஒரே மகளுடன் தாய் லதா விருத்தாச்சலம் பெரியார் நகரில் வீடு கட்டி வாழ்ந்து வந்தார். 12ஆம் வகுப்பு படித்திருக்கும் சக்தி சென்ற கொரோனா கால கட்டத்தின்போது, விருத்தாச்சலம் பெரியார் நகர் பகுதியிலுள்ள தனியார் பேக்கரியில் வேலைக்குச் சென்றுள்ளார். அதே பேக்கரியில் அற்புதராஜும் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து 12ஆம் வகுப்பு படித்து முடித்ததும், கடந்த 7 மாதத்துக்கு முன் இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி ஓடிச்சென்று அவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் திருமணம் முடிந்த பின் சக்தியின் வீடான விருத்தாச்சலம் பெரியார் நகரிலுள்ள தன் தாய் லதா வீட்டில் தனது காதல் கணவனுடன் ஒன்றாக வசித்து வந்தார். இதற்கிடையில் சக்தி 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், அற்புதராஜ் வழக்கம்போல வேலைக்குச் சென்று விட்டு நேற்று மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின் மீண்டுமாக வேலைக்குச் சென்றுள்ளார். இதையடுத்து தன் மருமகன் அற்புதராஜ் சென்ற பிறகு வீட்டிற்குள் நுழைந்த சக்தியின் தாயார் லதா, தனது மகள் உடல் அசைவு இல்லாத நிலையில் படுத்திருப்பதைக் கண்டு பதறியுள்ளார்.
இதில் லதாவின் அழுகுறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது சக்தி இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சக்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சக்தியின் கணவர் அற்புதராஜை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு எதுவும் தெரியாதது போன்று அற்புதராஜ் நாடகமாடியுள்ளார். பின் ஒருகட்டத்தில் காவல்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையில், தன் மனைவியை அடித்து கொன்றதாக அற்புதராஜ் ஒப்புக்கொண்டுள்ளார். 7 மாத கர்ப்பிணியாகவுள்ள தன் மனைவி அடிக்கடி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என கூறி வந்ததாகவும், இதனால் இருவருக்கும் வாக்குவாதம், சண்டைகள் ஏற்பட்டதாகவும் அற்புதராஜ் தெரிவித்தார்.
அவ்வாறு நடந்த சண்டையில் கோபமடைந்த அற்புதராஜ் தன் கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்றது தெரியவந்தது. இது பற்றி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையில் இறந்துபோன சக்தி தனது வீட்டிலுள்ள கதவுகள், சுவர்களில் அம்மா மீதும், தனது காதல் கணவர் மீதும் கொண்டுள்ள பாசத்தை எழுதி வைத்துள்ளார். அதாவது, “ஐ லவ் யு அம்மா, true lovers என கணவர் மற்றும் அம்மா பேரை வீடு முழுதும் எழுதி வைத்துள்ளார். மேலும் வீட்டின் கதவில், அம்மா உன்னை நான் புரிஞ்சுக்காம போயிட்டேன். உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும். உன்ன என்னால மறக்கமுடியாது அம்மா. நீ நல்லாஇருக்கணும் அம்மா” என ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வீடு முழுதும் தன் அம்மா மற்றும் கணவன் மீது கொண்ட பாசத்தை எழுத்துக்களால் பதிவு செய்திருக்கும் சக்தியின் குழந்தைத்தனமான பாசத்தை புரிந்துகொள்ளாமல் அவரை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.