வட ஆப்பிரிக்காவிலுள்ள லிபியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இங்கு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளுக்கும் கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சி படையினருக்கும் இடையில் கடும் சண்டை நடந்துவருகிறது. இம்மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் லிபியாவில் பல கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் இயங்கி வருகிறது. இந்த குழுக்களுக்கு இடையில் அவ்வப்போது மோதல் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில் ஹைதம் தஜோரியின் திரிபோலி விடுதலை பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும், அப்தில் கானி அல்கில்கி தலைமையிலான கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் தலைநகர் திரிபோலியில் நேற்று திடீரென்று மோதல் வெடித்தது. இந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு, வன்முறை போன்ற சம்பவங்கள் அரங்கேறியது. இவ்வாறு கிளர்ச்சியாளர்களின் இருதரப்புக்கு இடையில் நடந்த இந்த மோதலில் 13 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 95 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும் பல கட்டிடங்கள், வாகனங்களுக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து கொளுத்தியதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.