Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மீன்பிடிக்க சென்ற வாலிபர் பரிதாப பலி…. நடந்தது என்ன?…. போலீஸ் வெளியிட்ட தகவல்….!!!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள அசூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் அசூர் ஊராட்சிமன்ற செயலாளராக இருக்கிறார். இவருடைய மகன் ரஞ்சித்குமார்(21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தாண்டமுத்துவின் மகன் மேகநாதன்(21) ஆகிய இருவரும் எழுமூர் சாலையில் அசூர், ஆய்க்குடி கிராமத்திற்கும் இடையேயுள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்றனர். இதையடுத்து அங்கு அவர்கள் ஏரியில் இறங்கி வலைவீசி மீன்பிடித்தனர். இந்நிலையில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

அப்போது எதிர்பாராத வகையில் ஏரியில் நின்ற 2 பேர் மீதும் மின்னல் தாக்கியது. இதனால் காயமடைந்த மேகநாதன், ரஞ்சித்குமாரை கரைக்கு இழுத்துக் கொண்டுவர முயன்றுள்ளார். எனினும் அவரை இழுத்து கரை ஏற்ற முடியாததால், மேகநாதன் தட்டுத்தடுமாறி கரை ஏறி ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக தகவலறிந்த தீயணைப்புவீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன்பின் தீயணைப்பு வீரர்களுடன், அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏரியில் இறங்கி ரஞ்சித்குமாரை தேடினர்.

சுமார் 2 மணிநேர தேடுதலுக்கு பிறகு ரஞ்சித்குமாரை ஏரியிலிருந்து பிணமாக மீட்டனர். அதனை தொடர்ந்து  அவரது உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் மேகநாதன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் ரஞ்சித் குமார் ஏரியில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |