Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

லஞ்ச பணத்தை வாங்கி இப்படியா பண்ணீங்க?…. சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்…. வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை அருகேயுள்ள தோப்பிருப்பு பகுதியில் வசித்து வருபவர் விவசாயி அன்பழகன் (38). இவர் தன் தந்தை பெயரிலுள்ள நிலத்தை தனது பெயரில் பட்டா மாற்றம் செய்வதற்கு கொத்தட்டை கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதியை தொடர்புகொண்டார். அதற்கு அவர் பேரம்பேசி ரூபாய்.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. ஆனால் அப்பணத்தை கொடுக்க விரும்பாத அன்பழகன் இதுகுறித்து லஞ்சஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி லஞ்சஒழிப்பு போலீசார் அறிவுரைபடி, அன்பழகன் 10 ஆயிரம் ரூபாயை  பார்த்த சாரதியிடம் கொடுத்தபோது, அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து பார்த்தசாரதியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது. அதாவது, அவர் இதுவரை லஞ்சமாக பெற்ற பணத்தில் கடலூர் கூத்தப்பாக்கத்தில் ஒரு வீடு, புவனகிரி தாலுகா பூவாணிக் குப்பத்தில் 10 ஏக்கர் நிலம் வாங்கியது தெரியவந்தது. அதன்பின் கூத்தப்பாக்கத்திலுள்ள அவரது வீட்டிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. அதனை தொடர்ந்து பார்த்தசாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.

அதன்பின் பார்த்தசாரதி குறித்து மேல் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி புவனகிரி தாசில்தார், துணைதாசில்தார் உட்பட 4 பேரை லஞ்சஒழிப்பு காவல்துறையினர் அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தனர். அதன்படி நேற்று புவனகிரி தாசில்தார் ரம்யா, மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், வட்ட துணை ஆய்வாளர், குறுவட்ட சர்வேயர் போன்றோர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் முன் ஆஜரானார்கள். பின் அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பார்த்தசாரதி குறித்து பல விவரங்களை கேட்டு பெற்றனர். மேலும் முக்கியமான ஆவணங்களையும் கைப்பற்றினர். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கூறி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |