டெல்லி லோதி எஸ்டேட்டிலுள்ள தமிழ் கல்விக் கழகம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். சுமார் 51/2 அடி உயரம் மற்றும் ஆயிரத்து 500 கிலோ எடை உடைய இந்த திருவள்ளுவர் சிலை வி.ஜி.பி.உலக தமிழ் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் அவர்களால் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, திருக்குறள் என்பது பக்தி,வாழ்வியல், பிரபஞ்சம் என அனைத்தையும் உள்ளடக்கியது ஆகும். ஜி.யோ.போப்பின் மொழி பெயர்ப்புதான் சிறந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு என்றும் தெரிவித்தார்.
எனினும் ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பிலிருந்து பக்தி என்ற கண்ணோட்டம் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் மிக மிக பழமையானது எனவும் 3 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழில் யோககலையின் முக்கியத்துவம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார். அதன்பின் தமிழறிஞர்கள் காலனி மொழிபெயர்ப்பாளர்களின் உள்நோக்கம் கொண்ட மொழிபெயர்ப்பை விடுத்து உண்மையான பொருட்களை வெளிக்கொணர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.