இந்திய ரயில்வேயின் உணவு வழங்கல் பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி., ஆன்லைனில் பயணிகளுக்கான டிக்கெட் முன் பதிவு வசதியை அளிக்கிறது. ஐ.ஆர்.சி.டி.சி. பயனர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கு மேல் ஆகும். அவர்களில் 7.5 கோடி பேர் இதன் இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் ஆவர். இந்த நிலையில் தங்களது பயணிகள் மற்றும் சரக்கு வாடிக்கையாளர் விபரங்களை பணமாக்குவதற்கு ஆலோசகருக்கான டெண்டரை ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டு இருக்கிறது.
அதன் வாயிலாக ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டவும் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகளை தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அழைத்துள்ளது. இக்கூட்டத்துக்கான நோட்டீசை மக்களவை செயலகம் வெளியிட்டு இருக்கிறது. அதேநாளில் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தலைமையிலான இக்குழு முன்பு டுவிட்டர் இந்தியா பிரதிநிதிகளும் ஆஜராக இருக்கின்றனர்.
குடிமக்களின் தகவல் பாதுகாப்பு, தனி உரிமை குறித்து அது சம்பந்தப்பட்ட பல தரப்பினருடன் தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, கூட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பயணிகளின் விபரங்களை பணமாக்குவதற்கான ஒப்பந்த அறிவிப்பு குறித்து ரயில்வே அதிகாரப்பூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும் அது திரும்பப் பெறப்படும் என கூறப்படுகிறது. புது மசோதாவை கொண்டுவருவதற்காக தகவல் பாதுகாப்பு தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்திலிருந்து மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது தான் காரணம் ஆகும்.