கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 40க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினமும் ரூ.437 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து ஊதிய பாக்கிய வழங்க கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சி.ஐ.டி.யு. குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சங்க ஒப்பந்த தொழிலாளர்கள் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு டேங்க்மேடு பகுதியில் உள்ள திருப்பூர் மாநகராட்சி நீரூற்று நிலையம் முன்பு திடீர் கஞ்சி தொட்டி திறப்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் பிரான்சிஸ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் பாலகுமார், பொதுச் செயலாளர் ஆர்.சரவணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். போராட்டத்தில் சங்க ஒப்பந்த தொழிலாளர்கள் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஒப்பந்ததாரர் தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படததால் 6 மணிக்கு போராட்டம் முடிவடைந்தது.