இலங்கை நாட்டில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு மற்றும் சிங்கப்பூருக்கு தப்பிசென்றார். சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான விசா காலம் முடிவடைந்ததை அடுத்து அதிபர் சென்ற 11ஆம் தேதி தாய்லாந்து நாட்டுக்கு சென்றார். அங்கு 90 தினங்கள் தங்கி இருக்க தாய்லாந்து அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. தலைநகர் பாங்காக்கிலுள்ள ஓட்டல் ஒன்றில் கோத்தபயராஜபக்சே தங்கி இருக்கிறார். இதனிடையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஓட்டல் அறையிலேயே இருக்கும்படியும், வெளியில் வர வேண்டாம் எனவும் கோத்தபய ராஜபக்சேவிடம் தாய்லாந்து காவல்துறையினர் கேட்டுகொண்டுள்ளனர்.
இதன் காரணமாக அவர் வேறு வழியின்றி ஓட்டல் அறைக்குள்ளேயே அடைந்துகிடக்கிறார். அத்துடன் அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிகாரமிக்க பதவியிலிருந்த கோத்தபய ராஜபக்சே ஒரு அறையிலிருந்து வெளியே வர முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். ஓட்டல் அறைக்குள்ளேயே இருப்பது ஜெயிலில் உள்ளதுபோல் இருப்பதாக அவர் உணர்கிறார்.
அவர் நாடு திரும்ப இயலாததால் விரக்தியில் புலம்பிவருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தாய்லாந்தில் நவம்பர் மாதம் வரை தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும் கோத்தபயராஜபக்சே அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்பலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக அவர் இன்று 24ம் தேதி நாடுதிரும்ப இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவில் குடியேற நிரந்தரமாக குடியுரிமை பெற கோத்தபயராஜபக்சே விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.