உக்ரைனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போலந்து அதிபா் அண்ட்ரேஸ் டூடாவுடன் இணைந்து தலைநகா் கீவில் செய்தியாளா்களை சந்தித்து அதிபர் ஜெலென்ஸ்கி பேசினார். அவர் பேசியதாவது “சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் பிரிந்ததைக் குறிக்கும் சுதந்திரதினம் இன்று கொண்டாடப்படுகிறது. அந்நாளை முன்னிட்டு ரஷ்யா மிக மோசமான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதுபோன்ற நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டால், அதற்கு உக்ரைனின் பதிலடி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
ரஷ்யப் படையெடுப்பு நடைபெற்று 6 மாதங்கள் நிறைவடைகிறது. அதே நாளில் சோவியத்யூனியனில் இருந்து பிரிந்ததை சுதந்திரதினமாக உக்ரைன் கொண்டாடுகிறது. இதற்கிடையில் அந்நாளில் உக்ரைனின் அரசு க்கட்டிடங்கள் உள்ளிட்ட முக்கிய நிலைகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அத்தகைய தாக்குதல்களுக்கு சக்தி வாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என அதிபா் ஜெலென்ஸ்கி தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.