வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியாவில் அமெரிக்க-தென்கொரிய ராணுவம் கூட்டு போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வருகின்றது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதே சமயம் இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்ற அமெரிக்கா மற்றும் தென்கொரியா முயற்சித்து வருகின்றன. ஏவுகணை சோதனை அதிகரிப்பு ஆனால் தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை முழுமையாக திரும்பப்பெறும் வரை அணுஆயுதங்களை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என வடகொரியா கூறுகின்றது. அதுமட்டுமின்றி பொருளாதார தடைகளை திரும்பப்பெறுவதற்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக வடகொரியா அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து அதிரவைத்து வருகின்றது.
அந்த வகையில் வடகொரியா இந்த வருடம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏவுகணை சோதனையை அதிகரித்தது. கூட்டு போர்ப்பயிற்சி அதன்படி கடந்த 8 மாதங்களில் ஐ.நா.வால் தடை செய்ய நீண்ட தூரம் செல்லும் ஏவுகணை உள்பட்ட 30-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வடகொரியா சோதித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகின்றது. இந்நிலையில் வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க தயாராகும் விதமாக தென்கொரியாவில் அமெரிக்க மற்றும் தென்கொரிய ராணுவம் மிகப்பெரிய கூட்டு போர்ப்பயிற்சியை நேற்று தொடங்கியுள்ளன. மேலும் இருநாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் போர்விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் வான், கடல், தரை என 3 வழிகளிலும் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வடகொரியா குற்றச்சாட்டு இந்த போர்ப்பயிற்சி செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி வரை தொடரும் என்று அமெரிக்கா மற்றும் தென்கொரியா அறிவித்துள்ளன. வடகொரியாவுடன் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், கொரோனா பரவல் காரணமாகவும் அமெரிக்கா மற்றும் தென்கொரியா சமீப ஆண்டுகளாக இதுபோன்ற வருடாந்திர கூட்டு போர்ப்பயிற்சிகளை ரத்து செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் தென்கொரியா தங்களது கூட்டு போர் பயிற்சிகளை தற்காப்பு நடவடிக்கை என கூறி வரும் நிலையில், அதை மறுக்கும் வடகொரியா அவை தங்கள் நாட்டின் மீது படையெடுப்பதற்கான ஒத்திகைகள் என குற்றம் சாட்டுகின்றது. மேலும் பதற்றம் அதிகரிப்பு இதனால் அமெரிக்க-தென்கொரிய ராணுவத்தின் கூட்டு போர்ப்பயிற்சியை வடகொரியா தொடர்ந்து எதிர்த்து வருகின்றது. இந்த சூழலில் வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்க-தென்கொரிய ராணுவம் மிகப்பெரிய கூட்டு போர்ப்பயிற்சியை தொடங்கியிருப்பதால் கொரிய தீபகற்பத்தில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.