தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 6 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சந்திரகுமார் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் டிரைவரான வேல்ராஜ் என்பவருக்கும் இடையே ஒரு கோவில் திருவிழாவின்போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சந்திரகுமார் மதுரை பைபாஸ் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த ஒரு கும்பல் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த சந்திரகுமாரை அருகே இருந்தவர்கள் உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வேல்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.