நீலகிரியில் மீண்டும் மழை பெய்ததை தொடர்ந்து பனிமூட்டம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக சென்ற இரண்டு மாதங்களாக கனமழை பெய்த நிலையில் சென்ற நான்கு நாட்களாக மழை குறைந்து வெயில் அடித்து இதமான காலநிலை நிலவி வந்தது. இந்தநிலையில் மதியத்திற்கு பின்னர் ஊட்டி, அருவங்காடு, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது.
சாலைகளில் இருந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். மேலும் கடும் பனிமூட்டம் ஏற்பட்டதால் சாலையில் எதிரே வந்த வாகனங்கள் சரியாக தெரியாமல் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாகச் சென்றது. ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்புக்கும் உள்ளானது. தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றார்கள்.