உக்ரைன் மீது ரஷ்யா சென்ற பிப்ரவரி 24-ஆம் தேதி தன் ராணுவ தாக்குதலை துவங்கியது. இதில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் இராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இப்போதுவரை நீடித்து வரும் இந்த போரில் இருதரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் உக்ரைனிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த போர் தொடங்கிய பின் ரஷ்யா மீது சர்வதேச நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளது. முன்பாக ஐரோப்பிய நாடுகளின் 70% நிலக்கரித் தேவையை ரஷ்யாதான் பூர்த்திசெய்து வந்தது.
இந்த நிலையில் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் நடைமுறையில் இருப்பதால், ரஷ்யா தன் நிலக்கரியை சீனா மற்றும் இந்தியாவுக்கு அதிக தள்ளுபடியில் விற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து சீனாவின் நிலக்கரி இறக்குமதியானது ஜூலை மாதத்தில் 14 % உயர்ந்துள்ளது. ஏனென்றால் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் சரக்குகளை புறக்கணித்த போதும் கூட சீனா தள்ளுபடி நிலக்கரியை வாங்கியது. அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் மிகஅதிக அளவாக 74 லட்சத்து 20 ஆயிரம் டன் நிலக்கரியை ஒரேமாதத்தில் ரஷ்யாவிடமிருந்து சீனா இறக்குமதி செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கிறது.