காதல் திருமணம் செய்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் தங்கவேல்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் இருக்கும் ஜவுளி ஆயத்த ஆடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த ராமலட்சுமி என்பவரை தங்கவேல் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ராமலட்சுமிக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்து இறந்துவிட்டது.
இதனால் ராமலட்சுமி தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த தங்கவேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கவேலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.