வடமதுரை அருகே அய்யலூரில் திண்டுக்கல் திருச்சியில் நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற வண்டிக் கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. திண்டுக்கல் திருச்சி சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு இந்த கோவிலை வழிபட்டு செல்வது வழக்கமாகும். மேலும் ஆடி மாதம் கடைசி நாளில் வாகன ஓட்டிகள் கருப்பணசாமிக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி ஆடி மாத கடைசி நாளான நேற்று கோவிலில் கிடா வெட்டு திருவிழா நடைபெற்று உள்ளது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்துள்ளது.அப்போது நேர்த்திக்கடனாக கொண்டுவரப்பட்டிருந்த நூறுக்கும் மேற்பட்ட கிடாக்களை பலியிட்டு வாகன ஓட்டுனர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். அதன் பின் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டுள்ளது. இதற்கிடையே கோவிலை ஒட்டி உள்ள ரயில் தண்டவாளம் வழியாக திண்டுக்கல் இருந்து திருச்சி நோக்கி ரயில்வே மின்சார கம்பிகள் பராமரிப்பு பணிக்கான ரயில் என்ஜின் வந்துள்ளது.
அப்போது என்ஜினில் வந்த பராமரிப்பு ஊழியர்கள் வண்டி கருப்பண்ண கோவில் அருகே ரயில் இன்ஜினை சிறிது நேரம் நிறுத்திவிட்டு கோவிலில் வழிபாடு செய்துள்ளனர். அதன் பின்பு எலுமிச்சை உள்ளிட்ட பூஜை பொருட்களை இஞ்சின் முன்பு கட்டி உள்ளனர். அதன் பிறகு அங்கிருந்து ரயில் இன்ஜினில் திருச்சி நோக்கி சென்றுள்ளனர். இது பற்றி ரயில்வே ஊழியர்கள் பேசும்போது அய்யலூர் வண்டி கருப்பண்ணசாமி சாலை விபத்துகளை தடுக்கும் கடவுள். சாலை விபத்துகளை மட்டும் அல்லாமல் ரயில் விபத்துகளையும் சாமி தடுத்து வருவதாக நம்புகின்றோம். இதனால் பாதுகாப்பாக பயணிக்க வேண்டி கருப்பணசாமி வழிபட்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.