சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்காத 56 நிறுவனங்கள் மீது கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதனால் தனியார் அலுவலகங்கள். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் தலைமையில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது . அந்த ஆய்வின் போது நேற்று பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காத பணியாளர்கள் பணியாற்ற முன் அனுமதி பெறாத 56 நிறுவனங்கள் அதாவது கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வருங்காலங்களில் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் மாற்று விடுப்பு அல்லது இரட்டை சம்பளம் வழங்க வேண்டும் என்றும், பணியாளர்களை பணியாற்றுவதற்கு முன்பு உரிய படிவத்தை பூர்த்தி செய்து விடுமுறை நாளுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக சம்மந்தப்பட்ட தொழிலாளர் துணை அல்லது உதவி ஆய்வாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.