திடீரென இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கன் பாளையம் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவி ஜானகி தலைமை தாங்கினார். இதில் வினோபா நகர், கவுண்டன்பாளையம், கொங்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தங்களுடைய குறைகளை ஊராட்சி மன்ற தலைவியிடம் தெரிவித்தனர். அப்போது கவுண்டன் பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சில கல்குவாரிகள் சட்ட விரோதமான முறையில் இயங்கி வருவதாகவும், பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதால், வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும் சில பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
அதற்கு மற்றொரு தரப்பினர் கல்குவாரிகள் மூலமாக பலருக்கு வேலை கிடைப்பதாகவும், எங்களுடைய குடும்பங்கள் பயனடைவதாகவும் கூறினர். இதனால் இரு தரப்பினருக்கிடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஊராட்சி ஒன்றிய தலைவியிடம் கிராம மக்கள் தங்களுடைய குறைகளை மனுவாக எழுதி கொடுத்தனர்.