மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கோவில்பதி பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிக்குமார் குன்னத்தூரில் இருந்து வெள்ளியம்பதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது முதலியூர் பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த சரக்கு வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயமடைந்த ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த குன்னத்தூர் காவல்துறையினர் வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.