அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதி மாய தேவர் (88) நேற்று முன்தினம் காலமானார். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய சமயம் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் வந்துள்ளது. அதில் மாயதேவர் அதிமுகவின் சின்னத்தில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எம்ஜிஆர் என பாமர மக்கள் மனதில் பதிந்த இரட்டை இலை சின்னத்திற்காக இன்று அதிமுகவில் கடுமையான மல்லுக்கட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்த சின்னத்தில் முதன் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாய தேவர் அவரது மறைவை முன்னிட்டு அவரது உடல் அஞ்சலிக்காக சின்னாளப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதிமுக தொண்டர்கள் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் சசிகலா நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன் போன்றவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி சார்பாக திண்டுக்கல் சீனிவாசன் ஆர் பி உதயகுமார், பரமசிவம், ஜெகன் பார்த்திபன், தேன்மொழி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் மாய தேவர் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமியின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை என அவரது உறவினர்கள் அதிமுக தொண்டர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அதிமுக ஏற்கனவே தெற்கு மேற்கு என பிரிந்து நிற்பதாக கூறப்பட்டு வருகின்ற நிலையில் தென் மண்டலத்தை சேர்ந்த அதிமுக மூத்த நிர்வாகியின் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தாதது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.