திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை பகுதியில் அஞ்சு வீடு அருவி இருக்கிறது. இந்த அருவியில் பாதுகாப்பு ஏற்பாடு செய்வது தொடர்பாக வனத் துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். இதற்கிடையில் பேத்துப்பாறை, அஞ்சுவீடு, கணேசபுரம், பாரதி அண்ணா நகர், கோம்பை ஆகிய இடங்களில் பகல் நேரத்திலேயே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அவை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்துவதோடு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக புகாரின்படி மாவட்ட வனஅலுவலர் டாக்டர் திலீப், வனச் சரகர் சிவக்குமார், வனவர்கள் அழகுராஜா, கார்த்திக் போன்றோர் கொண்ட குழுவினர் நேற்று அந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமூக ஆர்வலர் பேத்துப் பாறை மகேந்திரன் என்பவர் யானைகளின் வழித்தடங்களில் சோலார் மின் வேலிகள் அமைத்து பாதுகாக்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அஞ்சுவீடு அருவியை சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும் எனவும் மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.