தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகின்றது.
தென்கொரியாவின் தலைநகரான சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள இன்சியோன் மற்றும் கியோங்கி ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் இரவு பெரும் கனமழை கொட்டியது. ஒரு மணிக்கு 100 மி.மீ என்கிற அளவில் மிக அதிகமான கனமழை பெய்ததாக தென்கொரியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சியோலின் டோங்ஜாக் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்தில் 141.5 மி.மீ மழைப்பொழிவு பதிவானதாகவும், இது 1942-ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட அதிக மழை பொழிவு என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே இரவில் கொட்டித்தீர்த்த பேய் மழையால் சியோல் மற்றும் இன்சியோன் மற்றும் கியோங்கி மாகாணங்கள் வெள்ளக்காடாகியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகள், மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் கனமழை, வெள்ளத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல நகரங்கள் இருளில் மூழ்கின. இதற்கிடையில் இந்த கனமழைக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.