கழிவுநீர் ஓடையில் தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையோரத்தில் இருக்கும் கழிவு நீரில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடைப்பதை பார்த்து அதிர்ச்சடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தூத்துக்குடியில் தங்கி வெல்டிங் வேலை பார்த்த ஐயப்பன்(42) என்பது தெரியவந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வடசேரியில் இருக்கும் வீட்டிற்கு வந்த ஐயப்பன் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டார். அதன் பிறகு ஐயப்பன் சடலமாக மீட்கப்பட்டார். எனவே யாரேனும் ஐயப்பனை அடித்து கொலை செய்தனரா? அல்லது மதுபோதையில் ஓடைக்குள் தவறி விழுந்து இறந்தாரா. என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.