தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வி வழங்கும் வகையில் விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மருத்துவர் சுபாஷ் சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் உடற்கல்வி என்பது மாணவர்களின் மேம்பாட்டுக்கு முக்கியமானது எனவும், தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளது? எத்தனை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளன? எத்தனை புள்ளிகளில் மைதானங்கள் உள்ளன உள்ளிட்ட விவரங்களை வழங்கக்கோரி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்ததாக தெரிவித்திருந்தார். ஆனால் இந்த தகவலை வழங்க மறுத்துவிட்டதாகவும் கூறினார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை நீதிபதி முனீஸ்வர்நாத் பந்தாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு விசாரித்த போது தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும் உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.