கியூபா நாட்டில் உள்ள எண்ணெய் கிடங்கில் மின்னல் தாக்கியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 80 பேர் காயமடைந்து இருக்கின்றனர். மேலும் 17 பேரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அங்குள்ள மடான்சாஸ் சிட்டி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இன்னும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றார்கள்.
எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு சர்வதேச நிபுணர்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளிடம் ஆலோசனைகளையும் உதவிகளையும் நாடி இருப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சம்பவத்தன்று ஒரு எண்ணெய் சேமிப்பு கலனில் மின்னல் தாக்கி தீப்பற்றியுள்ளது. இந்த தீ மளமளவென அருகில் இருந்த மற்றொரு எண்ணை சேமிப்பு கலனுக்கும் பரவியதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதி முழுவதும் கரும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. எண்ணெய் கிடங்கில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் வரை தூரத்திற்கு புகை பரவி இருக்கிறது. ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக தீயணைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.