இம்ரான்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
பாகிஸ்தான் நாட்டில் இம்ரான்கான் ஆட்சி வீழ்த்தப்பட்ட போது, அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் 131 எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். அவர்களில் 11 பேர் ராஜினாமாவை நாடாளுமன்ற சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த 11 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 25-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 தொகுதிகள் பெண்களுக்கானவை. 9 தொகுதிகளில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சார்பில் கட்சித்தலைவர் இம்ரான்கான் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை அந்தக் கட்சியின் துணைத்தலைவர் பவாத் சவுத்ரி உறுதி செய்துள்ளார். இங்கு 9 தொகுதிகளில் இம்ரான்கான் போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பது, பலரையும் திடுக்கிட வைத்துள்ளது. இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியதாவது, “9 தொகுதிகளில் பொருத்தமான வேட்பாளர் கிடைக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பினர். கடந்த 2018 பொதுத்தேர்தலில் இம்ரான்கான், 5 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றார் என்பது நினைவு கூறத்தக்கது. இப்படி பல தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறுவதன் மூலம் அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் பிரபலத்தை நிரூபித்துக்காட்ட முயற்சிக்கிறார்கள்.