காட்டுப் பன்றிகள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்குள் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. இந்நிலையில் கூடலூர் நகரில் இருக்கும் சாலைகளில் காட்டு பன்றிகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். காட்டு பன்றிகள் மற்றும் கால்நடைகள் நகர் பகுதிக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, காட்டு பன்றிகள் எளிதில் தாக்கும் குணம் கொண்டவையாக இருப்பதால் பெண்கள், மாணவிகள், வயதானவர்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே காட்டுப்பன்றிகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.