கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. நேற்று மாலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதனால் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பறந்து விரிந்து செல்கிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரை பகுதியில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஆடிப்பெருக்கு என்பதால் காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர் புனித நீராடுவது வழக்கம். ஆனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் புனித நீராட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.